சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
1.107
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வெந்த வெண் நீறு அணிந்து, பண் - வியாழக்குறிஞ்சி (திருக்கொடிமாடச்செங்குன்றூர் (திருச்செங்கோடு) அர்த்தநாரீசுவரர் அர்த்தநாரீசுவரி) Audio: https://www.youtube.com/watch?v=RjoEQ-XMftY |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.107  
வெந்த வெண் நீறு அணிந்து,
பண் - வியாழக்குறிஞ்சி (திருத்தலம் திருக்கொடிமாடச்செங்குன்றூர் (திருச்செங்கோடு) ; (திருத்தலம் அருள்தரு அர்த்தநாரீசுவரி உடனுறை அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருவடிகள் போற்றி )
வெந்த வெண் நீறு அணிந்து, விரிநூல் திகழ் மார்பில் நல்ல பந்து அணவும் விரலாள் ஒரு பாகம் அமர்ந்து அருளி, கொந்து அணவும் பொழில் சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற அந்தணனைத் தொழுவார் அவலம் அறுப்பாரே. | [1] |
அலை மலி தண்புனலோடு அரவம் சடைக்கு அணிந்து, ஆகம் மலைமகள் கூறு உடையான், மலை ஆர் இள வாழைக் குலை மலி தண் பொழில் சூழ் கொடி மாடச் செங்குன்றூர் நின்ற தலைமகனைத் தொழுவார் தடுமாற்று அறுப்பாரே. | [2] |
பால் அன நீறு புனை திருமார்பில், பல்வளைக்கை நல்ல ஏலமலர்க் குழலாள் ஒருபாகம் அமர்ந்து அருளி, கோல மலர்ப்பொழில் சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மல்கும் நீலநல் மாமிடற்றான் கழல ஏத்தல் நீதியே. | [3] |
வார் உறு கொங்கை நல்ல மடவாள் திகழ் மார்பில், நண்ணும் கார் உறு கொன்றையொடும் கதநாகம் பூண்டு அருளி, சீர் உறும் அந்தணர் வாழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற நீர் உறு செஞ்சடையான் கழல் ஏத்தல் நீதியே. | [4] |
பொன் திகழ் ஆமையொடு புரிநூல் திகழ் மார்பில், நல்ல பன்றியின் கொம்பு அணிந்து, பணைத்தோளி ஓர்பாகம் ஆக, குன்று அன மாளிகை சூழ் கொடி மாடச் செங்குன்றூர், வானில் மின்திகழ் செஞ்சடையான் கழல் ஏத்தல் மெய்ப்பொருளே. | [5] |
ஓங்கிய மூஇலை நல் சூலம் ஒரு கையன், சென்னி தாங்கிய கங்கையொடு மதியம் சடைக்கு அணிந்து, கோங்கு அணவும் பொழில் சூழ் கொடிமாடச் செங்குன்றூர் வாய்ந்த பாங்கன தாள் தொழுவார் வினை ஆய பற்று அறுமே. | [6] |
நீடு அலர்கொன்றையொடு நிமிர்புன் சடை தாழ, வெள்ளை- வாடல் உடை தலையில் பலி கொள்ளும் வாழ்க்கையனாய், கோடல் வளம் புறவில் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற சேடன தாள் தொழுவார் வினை ஆய தேயுமே. | [7] |
மத்த நல் மாமலரும் மதியும் வளர் கொன்றை உடன் துன்று தொத்து அலர் செஞ்சடைமேல்-துதைய உடன் சூடி, கொத்து அலர் தண்பொழில் சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மேய தத்துவனைத் தொழுவார் தடுமாற்று அறுப்பாரே. | [8] |
செம்பொனின் மேனியன் ஆம் பிரமன் திருமாலும் தேட நின்ற அம் பவளத்திரள் போல் ஒளி ஆய ஆதிபிரான், கொம்பு அணவும் பொழில் சூழ் கொடி மாடச்செங்குன்றூர் மேய நம்பன தாள் தொழுவார் வினை ஆய நாசமே. | [9] |
போதியர் பிண்டியர் என்று இவர்கள் புறம் கூறும் பொய்ந்நூல் ஓதிய கட்டுரை கேட்டு உழல்வீர்! வரிக்குயில்கள் கோதிய தண்பொழில் சூழ் கொடி மாடச் செங்குன்றூர் நின்ற வேதியனைத் தொழ, நும் வினை ஆன வீடுமே. | [10] |
அலை மலி தண் புனல் சூழ்ந்து அழகு ஆர் புகலிநகர் பேணும் தலைமகன் ஆகி நின்ற தமிழ் ஞானசம்பந்தன், கொலை மலி மூஇலையான் கொடி மாடச்செங்குன்றூர் ஏத்தும் நலம் மலி பாடல் வல்லார் வினை ஆன நாசமே. | [11] |